வியாழன், 10 ஜூன், 2021

சிமிண்ட் இல்லாத செங்கல் பாலம்

சிமிண்ட் இல்லாத செங்கல் பாலம்

மதுரை மஹால் சிமிண்ட், இருப்புக் கம்பிகள், மரம் பயன்படுத்தப் படாமல் செங்கலையும் சுண்ணாம்பையும் கொண்டு கட்டப்பட்டுள்ளது.   1904ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் சிமிண்ட் உற்பத்தி தொடங்கியுள்ளது.  அதற்கு முன் கட்டப்பெற்ற கட்டிடங்கள் பாலம் என அனைத்தும் சிமிண்ட் இரும்புக்கம்பி பயன்படுத்தப்படாமலேயே கட்டப்பெற்றுள்ளன.  இவ்வாறகாகக் கட்டப்பட்ட பாலங்கள் இன்றும் உள்ளன.

இப்போது சீனா 200 மில்லியன் டன் சிமிண்ட் உற்பத்தி செய்து உலகளவில் முதலிடம்  வகிக்கிறது.  அடுத்தபடியாக இந்தியா உள்ளது.  இந்தியாவில் தயாரிக்கப்படும் சிமிண்ட் 95%  உள்நாட்டில் உள்ள கட்டுமானத்திற்கே பயன்படுத்தப்படுகிறது.  5% மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்திய சிமென்ட் உற்பத்தித் தொழிலில் 132 பெரிய சிமென்ட் ஆலைகள் உள்ளன.  ஆகஸ்ட் 31, 2008 கணக்கின்படி இந்தியாவின் சிமிண்ட் உற்பத்தித் திறன் 204.29 மில்லியன் டன் ஆகும் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

இப்போது போக்குவரத்து அதிகமாகி வாகனங்களின் எண்ணிக்கை கூடுதலான காரணத்தினால்  சாலைகளை அகலப்படுத்தி வருகின்றனர்.   சாலைகளை அகலப்படுத்தும் போது சிறிய பாலம் கட்டுவதற்குக் கூட சிமிண்ட்டையும் இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் சிமிண்ட் மற்றும் இருப்புக்கம்பிகளைப் பயன்படுத்தாமல்,  உள்ளூரில் உள்ளூர் மக்களால் சூளையில் தயாரித்துச் சுட்டெடுக்கப்பட்ட செங்கலையும், உள்ளுர் தயாரிப்பான  சுண்ணாம்பையும் மட்டுமே பயன்படுத்தி, உள்ளூர்  கொத்தனார்களால் கட்டப்பெற்ற பாலம் இது.    100 வருடங்களுக்கும் மேலாகச் சிதையாமல் அப்படியே உள்ளது.  

எதையும் தொழிற்சாலையில் தயாரித்து, அதை விலை கொடுத்து வாங்காத காலம் அது.  எல்லாப் பாலங்களையும் சிமிண்ட்டில்தான் கட்டவேண்டும் என்றில்லாமல் சிறுசிறு கட்டுமானங்களை உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு, உள்ளூர் தயாரிப்பான செங்கற்களைக் கொண்டே கட்டினால் சாதாரண மக்களும் பயனடைவர் அல்லவா?