சனி, 16 நவம்பர், 2019

29.06.2014 ஐயப்பன் புலி வாகனனா?

தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் புலி வாகனனா?


2014ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி 110நாட்கள் பாதயாத்திரை.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் 20 யாத்திரிகர்களை உடன் அழைத்துச் சென்றார்.  இந்தப் புனிதமான பாதயாத்திரையில் கலந்துகொண்ட சில யாத்திரிகர்கள் ஐயப்பகுருசாமிமார்கள்.  எங்களை யெல்லாம் பாதயாத்திரையாகக் காசிக்கு அழைத்துச் சென்ற குருசாமி பச்சைக்காவடி அவர்களும் ஐயப்பகுருசாமி ஆவார்.  ஆனால் எனக்குத்தான் 57 வயதாகியும் ஐயப்பனை ஒரு முறையேனும் தரிசிக்கும் பேறு கிடைக்கவில்லை.

காசி பாயாத்திரையில் வழிநெடுகிலும் பல ஐயப்பன் கோயில்களில் தங்கும் பேறு பெற்றோம்.  அதிலும் குறிப்பாக பெங்களூரு எலகங்கா ஐயப்பன் கோயிலில் 28 & 29.06.2014 இரண்டு நாட்கள் தங்கும் பெரும் பேறு பெற்றோம்.

அப்போது அங்கிருந்த ஐயப்பன் படத்தைக் காட்டி "புலி வாகனன் " என்றனர்.  மஹிஷியை வதம் செய்தார் ஐயப்பன்.. அவருக்கு நன்றி செய்யும் பொருட்டுத் தேவேந்திரனே புலியாக உருமாறி, ஐயப்பனுக்கு வாகனமானார்.
சுவாமி ஸ்ரீஐயப்பன் சரிதம் இதை விரிவாகச் சொல்கிறது என்றனர்.

என்னிடம் கேட்டால்?!

தாயின் உடல்நலனுக்காகப் புலிப்பால் கொண்டுவரக் கானகத்துள் செல்கிறார் ஐயப்பன்.  "புலிப்பால்"  வேண்டும் என்றால், குட்டி போட்ட புலி வேண்டும்.  குட்டி போட்டுள்ள எந்தவொரு மிருகமும் வேறெந்த  மிருகத்தையும்  அருகில் அண்ட விடாது.  குட்டி போட்டுப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்புலியின் அருகில் யாரேனும் செல்லமுடியுமா?

ஸ்ரீ தர்மசாஸ்தா சென்றார்.  புலிப்பால் வேண்டிக் குட்டிபோட்டுப் பால்கொடுக்கும் பெண்புலியை அழைத்துவந்தார்.

ஆனால் குட்டி போட்டுப் பால்கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்புலிமேல் யாரேனும் சவாரி செய்வார்களா?
தானமாகப் பால்கொடுக்க முன்வந்த பெண்புலிமேல் சவாரி செய்வது தர்மம் ஆகுமோ?
வாயில்லா ஜீவனை வதைத்திடுவார்களோ?
தர்மசாஸ்தா இத்தகைய அதர்மத்தைச் செய்வாரோ?

எனவே என்னிடம் கேட்டால் .....
1) ஐயப்பன் சொல்லுக்குப் புலி அடங்கி நடக்கும் என்பதே சரியாகலாம் !
2) ஐயப்பன் பால் கொடுக்கும் பெண்புலி மேல் ஏறி வந்தான் என்பதும், ஐயப்பனை "புலி வாகனன்" என்பதும் தவறாகலாம் !
3)படத்தில் புலியுடன் அதன்  குட்டிகளைக் காட்டுவது சரியாகலாம் !
4) படத்தில் ஐயப்பனுடன் பல புலிகளைக் காட்டுவது தவறாகலாம் !
5) அல்லது புலிப்பாலைத் தானமாகக் கொடுக்க முன்வந்த பெண்புலியின் ஜோடிப்புலியான ஆண்புலியின் மீது ஐயப்பன் ஏறி வந்தார் என்பது சரியாகலாம் .

எனது கருத்து சரியா ....?
“குட்டிபோட்டுப் பால்கொடுத்துக் கொண்டிருந்த பெண்புலியை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறி ஸ்ரீ ஐயப்பன் வந்தானா?” என்ற  எனது இந்த ஐயத்தை, ஸ்ரீதர்மசாஸ்தாவின் வரலாற்றை நன்கு அறிந்த  ஐயப்பசுவாமிகள் யாரேனும்  நீக்கி அருள வேண்டுகிறேன்.

தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பனின் திருவடி தரிசனம் வேண்டி,
https://groups.google.com/forum/#!topic/thiruppuvanam/bFMRHvFPO7U

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கார்த்திகை 1 (17112019) ஞாயிற்றுக் கிழமை.
---------------------------------------
புராண விளக்கம் -
எனது இந்தப் பதிவை வாட்ஸ்ஆப் செய்தி வழியாக அறிந்த நண்பர் காசிஸ்ரீ திருப்பதி கண்ணன் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு 29.06.2020 அன்று விளக்கம் அளித்தார்.

தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் வாகனமாக உள்ளது பெண்புலி அல்ல என்றும்,  மஹிஷியை வதம் செய்தவுடன் இந்திரன் தலைமையிலான தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஸ்ரீ ஐயப்பனைக் கண்டு வழிபட்டனராம்.  அப்போது தேவர்தலைவனான இந்திரனே புலியாகமாறி ஸ்ரீ ஐயப்பனுக்கு வாகனம் ஆகியுள்ளார்.   தேவர் பலரும் புலியாக மாறி உடன் வந்துள்ளனர்.  அவர்களில் ஒருவர் பெண்புலியாக மாறிப் புலிப்பால் கொடுக்க வந்துள்ளார்.  இதுவே புராணம் கூறும் கருத்து ஆகும். எனவே  குட்டிபோட்டுப் பால் கொடுக்கும் பெண்புலியை ஸ்ரீ ஐயப்பன் வாகனமாகப் பயன்படுத்தவில்லை என்ற விளக்கத்தை அளித்தார்.

நீண்ட காலமாக என் மனதில் நிலைத்திருந்த ஐயத்தைப் போக்கிய காசிஸ்ரீ திருப்பதி கண்ணன் அவர்களுக்கு எனது நன்றி.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆனி 16 (30.06.2020) செவ்வாய்க் கிழமை.
---------------------------------------

புதன், 16 அக்டோபர், 2019

08.10.2014 இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு


குருவருளாலும் திருவருளாலும் இராமேசுவரம் - காசி முதலாம் பாதயாத்திரை முடிந்தது.
குருசாமி பச்சைக்காவடி அவருடன் அழைத்துச் சென்ற பாதயாத்திரிகர்கள் நாங்கள் எல்லோரும் இராமேசுவரம் - காசி யாத்திரை நிறைவடைந்தவுடன், காசியிலிருந்து இராமேசுவரத்திற்குத் தொடரியில் பயணம் செய்து, இராமேசுவரத்தில் வழிபாடு செய்து வணங்கிக் கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்று சேர்ந்து குலதெய்வங்களை வணங்கிக் கொண்டோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை முடிவடைந்தவுடன், அன்னதான வண்டியில் (Tata 407)  காசியிலிருந்து இராமேசுவரத்திற்குத் திரும்பினார்.  அப்போது என்னையையும் கோட்டையூரிலிருந்து இராமேசுவரத்திற்கு அழைத்துச் சென்றார்.  இராமேசுவரத்தில் வழிபாடு செய்த பின்னர், திரும்பும் வழியில் 08.10.2014 அன்று, கோட்டையூரில் உள்ள எங்களது வீட்டிற்கு வந்து என்னை இறக்கிவிட்டுவிட்டு, தங்கிச் சென்றார்.

கோட்டையூரிலிருந்து பொன்னமராவதி வலையபட்டிக்குச் செல்லும் போது எடுத்த படம் இது.

(படத்தில் குருசாமி பச்சைக்காவடி, அடியேன், இரண்டாவது பேரன் சர்வேசுவரன், எனது மனைவி நாகலெட்சுமி)

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

புனித பாத யாத்திரை நிறைவு

புனித பாத யாத்திரை நிறைவு 



குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம் .
12.09.2014 அன்று அதிகாலை காசி மாநகர் வந்து சேர்ந்தோம் .
இன்று 20.09.2014 சனிக்கிழமை
யாத்திரிகர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தனர் .
மாலை 3.20 மணிக்கு யாத்திரிகர் அனைவரும் காசி நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பாத யாத்திரையாக
2 கி. மீ. தூரத்தில் உள்ள கால பைரவர் கோயில் சென்று வழிபட்டு வந்தோம் .
இத்துடன் பாதயாத்திரை இனிதே நிறைவு பெற்றது .
நாளை இரவு தொடர்வண்டியில் இராமேஸ்வரம் பயணம் .
24.09.2014 அன்று இராமேஸ்வரம் கோயிலில் புனித கங்கை அபிஷேகம் வழிபாடு .

இந்த யாத்திரையில் மானசீகமாக என்னுடன் பயணித்த அன்பர் அனைவருக்கும் திருவருள் சித்திப்பதாக .

அருள்மிகு திருப்பூவணம்காசிநாதர் மின்னாள் திருவருளைச் சிந்தித்து ,
குருஜி பச்சைக்காவடி அவர்களின் பாதம் பணிந்து ,
அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி , அன்னபூரணி , காலபைரவர் மற்றும் காசி உறை தெய்வங்களின் திருவருள் சித்திப்பதாக ...

அன்பன்
காசிஶ்ரீ கி.காளைராசன் .
20 செப்டம்பர், 2014 ·


வெள்ளி, 13 செப்டம்பர், 2019

காசியில் அவசியம் வழிபட வேண்டிய தெய்வங்கள்

காசியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய தெய்வங்கள் யாவை?

குருஜி பச்சைக்காவடி அவர்கள் தலைமையில் வைகாசி 12 (26.05.2014) திங்கள்கிழமை அன்று இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு புனித பாத யாத்திரையை துவக்கி வைகாசி 26 (11.09.2014) இரவு காசி எல்லைக்கு வந்து சேர்ந்தோம் .

யாத்திரையின் போது எனக்கு ஏற்பட்ட மேற்கண்ட ஐயத்துக்கு ஒவ்வொருவரும் பலவாறு பதில் சொன்னார்கள்.

இராமேஸ்வரம் காசி புனித பாதயாத்திரிகர்களுள் ஒருவரான சென்னை திரு.D. தனசேகரன் அவர்கள், விழுப்புரம் கைலாசகுருக்கள் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது
பற்றி கேட்டார் .

அவரும்,
"விசுவேசுவம் மாதவம் துந்திம் தண்டப்பாணிக்க பைரவம் வந்தே காசிம் குகாம் கங்காம் பவானி மணிகர்ணிகாம்"
என்று கூறினார்.

1) விசுவேசுவம் = காசி விசுவேசுவரன்
2) மாதவம் = காசி மாதவப் பெருமாள்
3) துந்திம் = விசுவேசுவர் சந்நிதிக்கு எதிரே உள்ள துந்திவிநாயகர்
4) தண்டபாணி = பைரவர் கோயில் அருகில் உள்ள முருகன்
5) பைரவம் = காலபைரவர்
6) வந்தே காசிம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள காசிமாதா
7) குகாம் = தண்டபாணி கோயில் அருகில் உள்ள குகைக் கோயில்
8) கங்காம் = கங்கை ஆறு
9) பவானி = விசு வேசுவர் அருகில் உள்ள அம்மன்
10) மணிகர்ணிகாம் = மணிகர்ணிகைத் தீர்த்தம்
இத் தெய்வங்களுடன் சோலிமாதாவையும் சேர்த்து 11 தெய்வங்களைக் காசியில் 11  நாட்கள் தங்கியிருந்து வழிபட வேண்டும் என்று விளக்கம் அளித்தார் .

மெய்யன்பர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

புதன், 11 செப்டம்பர், 2019

கால்வலி, மூட்டுவலி நிவாரணி

புளியும் வேம்பும் ....
எதற்குப் பயன்படும் ?

இவற்றின் இலைகளை ஆய்ந்து சட்டியில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் சூடாக இருக்கும் போது துண்டை நனைத்து எடுத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். கால் மூட்டு வலிக்குச் சிறந்த வைத்தியம்.

வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்துக் குளிப்பது போன்று, மாதம் ஒருமுறையாவது புளியஇலையையும் வேப்பயிலையையும் போட்டு வேகவைத்து இளஞ்சூட்டில் குளிக்கலாம். உடல் அசதி ஓடிப்போய் விடும்.
காசிஸ்ரீ சத்தியமூர்த்தி அவர்கள் 2013ஆம் ஆண்டு இராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பாதயாத்திரை செய்தார். இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை வரும்போது கால்கள் இரண்டும் வீக்கம் ஆகிவிட்டன. திருச்சியோடு பாதயாத்திரையை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் யாத்திரைக்கு வந்திருந்த சமையல்காரர் வேப்பயிலை புளியயிலையை வேக வைத்து ஒத்தடம் கொடுத்துள்ளனர். இப்படி ஒத்தடம் கொடுத்துக் கொண்டே தினமும் நடந்து சென்றார். இராமேசுவரம் காசி பாதயாத்திரையை நிறைவு செய்தும் விட்டார்.

வேப்பயிலையும் புளியயிலையும் இருக்கும் போது மூட்டுவலி கால்வீக்கம் உடல்அசதி என்றால் கவலைப்படவே வேண்டாம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

ஸ்ரீராமர் நடந்து சென்ற பாதை

ஸ்ரீராமர் நடந்து சென்ற பாதை. அலகாபாத் ஆசிரமத்தில் உள்ளபடி...






காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Kalairajan Krishnan
28 ஆகஸ்ட், 2015 · 

புதன், 28 ஆகஸ்ட், 2019

காசிராசாவின் சின்னம் மீன்சின்னம்




காசிராசா அரண்மனை கோட்டை உச்சியில் பாண்டியரின் மீன்கொடிதான் பறக்கிறது!

பல்லக்கு சிங்காசனம் அந்தப்புறம் எல்லாம் பாண்டியரின் மீன் சின்னமே பொறிக்கப் பட்டுள்ளது!  ஆனால் அந்த அருங்காட்சியகத்தில் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.  அதனால் பல்லக்கு சிங்காசனம் இவற்றில் பொறிக்கப் பெற்றிருந்த மீன்சின்னங்களைப் படம் எடுக்க இயலாமல் போனது.

28.08.2015, காலை 11.00மணிக்கு,
காசியிலிருந்து கி.காளைராசன்
Kalairajan Krishnan
28 ஆகஸ்ட், 2015

புதன், 7 ஆகஸ்ட், 2019

திருத்தணிக்கு சக்கரைக் காவடி பாதயாத்திரை

தேவகோட்டை நகரத்தார்கள் திருப்பணி செய்த கோயில்கள் அதிகம். முருகனுக்குக் காவடி எடுத்துச் செல்லும் தொன்மையான மரபை இன்றளவும் பெரிதும் மதித்துக் காத்து வருகின்றனர்.
தேவகோட்டையிலிருந்து சென்னை வழியாகத் திருத்தணிக்கு சக்கரைக் காவடி பாதயாத்திரையை துன்மதி ஆண்டு மாசி மாதம் 32ஆவது நாள் (16.03.1982) தொடக்கி சென்னை வழியாக 330 மைல் (528 கி.மீ,) நடந்து 07.04.1982 அன்று வேல் சாத்தி வழிபாடு செய்துள்ளனர்.
இந்தக் காவடி யாத்திரை வரும் ஆண்டுகளில் தொடர வேண்டும். நமது மரபு வழிபாடுகள் காக்கப்பட வேண்டும்.
படத்தில் உள்ள அடியார்கள் யார்யாரென அடையாளம் காண முடிகிறதா?


சனி, 20 ஜூலை, 2019

பொந்த புளி

பொந்த புளி



2014 இராமேசுவரம் காசி புனித பாதயாத்திரை
யாத்திரையின் முதல்நாள்.

இராமேச்சுரம் பேருந்து நிலையத்திற்கு சற்று தொலைவில் சாலையோரம் உள்ள சுமார் 6அடி விட்டமுடைய  "பொந்த புளி" மரம் இருப்பதைப் கண்டேன்.

இந்த மரம் பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது.  அதன் அடிப்பகுதி இளவம்பஞ்சு மரம்போன்று இருந்து.  புளியமரம் போன்று மரப்பட்டைகள் இல்லை.  மேலும் இலையும் புளியஇலை போன்று இல்லை. பெயரில்தான் ‘புளி‘ உள்ளது. 
மரத்தின் விதைகள் எதையும் என்னால் காண இயலவில்லை.  மரத்தைப்பார்த்தால் புளியமரம் போன்று இல்லை.  மிகவும் பருத்து, வினோதமான ஒரு மரமாக இருந்தது.   ஆனாலும் மரத்தில் எழுதப்பட்டுள்ள “பொந்த புளி மரம்“ என்ற பெயரைக் கொண்டே இது ஒருவகைப் புளிய மரமாக இருக்க வேண்டும் என்று கருதவேண்டியுள்ளது. 

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வியாழன், 13 ஜூன், 2019

பிரப்பன்வலசையில் பழமையான பிள்ளையார்

பிரப்பன்வலசையில் பழமையான பிள்ளையார்

Kalairajan Krishnan
13 ஜூன், 2014, பிற்பகல் 8:52 ·

இராமநாதபுரம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் மிகமிகப் பழமையான பிள்ளையார் சிலை உள்ளது.  இது ஒருவகையான படிமப்பாறையால் (sedimentary rock) ஆனது.



பழைமையான இந்தப் பிள்ளையார் சிதிலமடைந்துள்ளதால், இதனைத் தூக்கி அரசமரத்தடியில் வைத்துவிட்டுப் புதிதாகக் கோயில் ஒன்று கட்டிப் புதியதொரு பிள்ளையாரை வைத்து வழிபடும் முயற்சியில் உள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு இந்தப் பிள்ளையார் மிகவும் பழைமையான படிகப்பாறையால் செய்யப்பட்டது என்ற தெரியவில்லை.  இந்தப் பிள்ளையார் கோயிலுக்கு அருகே படிமப்பாறை  (sedimentary rock) யால் செய்யப்பெற்ற தூண் ஒன்றும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. 


புதிய கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பழமையான பிள்ளையார் சிலை தொல்லியல் துறையினராலும், இந்து அறநிலையத் துறையினராலும் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று .







2014ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போது நான் பார்த்து வழிபட்ட கோயில்களில் இது முதலாவது கோயிலாகும்.

பிரப்பன்வலசை உள்ளுர் அன்பர்களும், மாவட்ட நிருவாகமும், இந்து அறநிலையத் துறையினரும், தொல்லியல்துறையினரும், புவியியல்துறையினரும் இந்தப் படிமப் பாறையினால் செய்யப்பெற்றுள்ள இந்தப் பழைமையான பிள்ளையாரையும் கோயில்தூணையும் மீட்டெடுத்துப் பாதுகாத்திட வேண்டுமென வேண்டுகிறேன்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

01.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, தெள்ளாறு





தெள்ளாறு கோயிலில் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. மிகவும் பழமையான பிள்ளையாரும், பெருமாள் சிற்பங்களும் உள்ளன.
அறுபடைவீடு பாதயாத்திரை.
காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் 20 யாத்திரிகர்களும் 60 நாட்கள் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டிருந்த போது, 01.08.2017 அன்று தெள்ளாறு திருக்கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்கி இளைப்பாறிச் சென்றனர். பாதயாத்திரை செய்த அடியார்கள் பலரும் அன்றையதினம் திருக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து கொண்டனர்.






























சனி, 26 ஜனவரி, 2019

01.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, வலையன்குளம் பெருமாள் கோயில்

வலையன்குளம் பெருமாள் கோயில்


எல்லாச் சமூகத்தாரும் ஒன்றாய் வணங்கும் கோயில்.
திருவிழாவின் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கும் மேலாக தினமும் நாடகம் நடத்தி வழிபடும் கோயில்.
கோயில் வளாகத்திற்குள் யாரும் காலணி அணிந்து செல்லக் கூடாது எனக் கிராமத்தினரால் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ள கோயில்.
பெண்கள் கோயில் வாலிலேயே நின்று வழிபடும் கோயில்.

மூலவரோ சுயம்பு.
பெயரோ பெருமாள் கோயில்.
விபூதி பிரசாதம்.
வில்வம் தீர்த்தம்.
தேவியர் இல்லாத மூலவர்.
பரிவார தெய்வங்கள் ஏதும் இல்லாத கோயில்.

ஊரார் ஒன்று சேர்ந்து நடத்தும் அன்னதானம்.
உயிர்பலி இல்லாத வழிபாடு.

மதுரை விமானநிலையம் அருகில் உள்ளது வலையங்குளம் அருள்மிகு பெருமாள் கோயில்.

சாதியின் பெயரால் சண்டைகளை வளர்க்கும் பகுத்தறிவாளர்களும்,  கடவுளை நம்பும் காட்டுமிராண்டிகளும் அவசியம் வழிபடவேண்டிய கோயில்.

அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் வழிபாடு செய்து கொண்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் 01.07.2017 அன்று இங்கே உள்ள சமுதாயக்கூடத்தில் தங்கியிருந்து கோயில்வழிபாடு செய்து கொண்டோம்.

வலையங்குளம் திரு.மாரியப்பன் செட்டியார் அவர்களும், நகைக்கடை வைத்திருக்கும் நகரத்தார் அன்பர் ஒருவரும் அடியார்களை  அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 11 ஜனவரி, 2019

29.05.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, திருத்தணி

அறுபடைவீடு பாதயாத்திரை,
திருத்தணி







திருத்தணியில் நகரத்தார் விடுதி. அனைத்து முக்கியமான வழிபாட்டுத் தலங்களிலும் நகரத்தார் விடுதி அமைத்துள்ளனர். குருநாதர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும், அவருடன் 20 அடியார்களும் சேர்ந்து, அறுபடைவீடு 60 நாட்கள் பாதயாத்திரையாக 29 மே 2016 ஞாயிற்றுக் கிழமை யன்று திருத்தணி சென்று அடைந்தோம். திருத்தணி நகரவிடுதியின் சார்பாக நகரத்தார்கள் யாத்திரிகர்களுக்கு மேளதாளம் வைத்து, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வரவேற்று நகரவிடுதிக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் நகரவிடுதியில் இருந்த அனைவரையும் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார். 2017 ஆம் ஆண்டு இரண்டாவது வருடமும் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் தலைமையிலான அறுபடை பாதயாத்திரையின் போதும் திருத்தணியில் நகரத்தார் விடுதியின் சார்பாக யாத்திரிகர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூகுள் புவிப்படத்தில் https://goo.gl/maps/mfeXbfPhZWs