திங்கள், 8 ஜூன், 2020

06.06.2014 காசி பாதயாத்திரை (12 ஆவது நாள்)

06.06.2014 காசி பாதயாத்திரை (12 ஆவது நாள்)
வைகாசி 23  வெள்ளிக் கிழமை.

அதிகாலை 3.45 மணிக்கு கொண்ணம்பட்டி  ஸ்ரீ பழனியாண்டவர் திருமண மண்டபத்திலிருந்து புறப்பட்டோம்.  நேற்றைய சூறைக்காற்றிலும் ஒருமணி நேரத்திற்கும் கூடுதலாகப் பெய்த மழையின் காரணமாகவும், வழி நெடுகிலும் மரங்கள் சாய்ந்து, கிளைகள் ஒடிந்து, சாலையில் விழுந்து கிடைத்தன. 






காசி பாதயாத்திரை

6.00 மணிக்கு கூழிப்பிறை (குழிப்பிறை என்று அழைக்கப்படுகிறது) அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.  கோயிலில் வழிபாடு.  ரொட்டியும் தேநீரும்.
8.00 மணிக்கு பனையபட்டி.
வழியில் புல்லான் சாது அவர்களின் ஜீவசாமி உள்ள திசையைப் பார்த்து வணங்கிகொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம்.


காசி பாதயாத்திரை






















10.00 மணிக்கு நச்சாந்துபட்டி சிவன்கோயில் எதிரேயுள்ள நகரத்தார் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

குழிப்பிறை பனையபட்டி நச்சாந்துபட்டி இந்த ஊர்களில் எல்லாம் நகரத்தார்களும் பொது மக்களும் கூடி நின்று வரவேற்பு அளித்து வழிபாடு செய்வித்தனர்.
ஓய்வு





 
காசி பாதயாத்திரை

https://goo.gl/maps/4MXrJq3byf9MxwPF9
06.06.2014 கொண்ணம்பட்டி  நச்சாந்துபட்டி
பயணம் சுமார் 17 கி.மீ.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 7 ஜூன், 2020

05.06.2014 காசி பாதயாத்திரை (11 ஆவது நாள் மாலை)

05.06.2014 காசி பாதயாத்திரை (11 ஆவது நாள் மாலை)

வைகாசி 22 வியாழக் கிழமை.

யாத்திரை - 
பயணத் திட்டத்தில் ஒரு சிறு மாற்றம்.  நாளை 06.06.2014  காலை பொன்னமராவதி வலையபட்டியிலிருந்து புறப்பட்டு கொப்பனாபட்டி, குழிப்பிறை, பனையப்பட்டி வழியாக நற்சாந்துபட்டி சென்று தங்குவது என்பது பழைய பயணத் திட்டம்.  

இந்தப் பயணத்திட்டத்தில் ஒரு சிறு மாறுதலாக இன்று 05.06.2014 மதிய உணவிற்குப் பின் மாலை 5.00 மணிக்குப் படைப்பு வீட்டிலிருந்து யாத்திரை புறப்பட்டு கொண்ணம்பட்டி சென்று இரவு தங்கியிருந்து, நாளை காலை கொண்ணம்பட்டி யிலிருந்து புறப்பட்டு நற்சாந்துபட்டி செல்லாம் என்றும் குருசாமி அவர்கள் பயணத் திட்டத்தைச் சிறிது மாற்றி அமைத்தார்கள்.

புதிய பயணத்திட்டத்தின்படி, இன்று 05.06.2014 மாலை 5.00 மணிக்கு யாத்திரை தொடங்கியது.   வலையபட்டி ஸ்ரீ துர்க்கை படைப்பு வீட்டிலிருந்து புறப்பட்டு பொன்னமராவதியைக் கடக்கும் போது நன்கு மழை பெய்யத் துவங்கியது.  ஐயா பச்சைக்காவடி அவர்கள் அன்னதான வண்டியை நிறுத்தி அதிலிருந்து குடைகளை எடுத்து யாத்திரிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு குடை வழங்கினார்கள்.   குடையைப் பிடித்துக்கொண்டு மழையில் நடக்க ஆரம்பித்தோம்.   மழை பெய்த காரணத்தினால் சாலையில் நடந்தால் நடையன் வழுக்கியது.   சாலையை விட்டுக் கீழே இறங்கினால் சேறும் சகதியும் நடையனில் ஒட்டிக் கொண்டு வேட்டி யெல்லாம் சேறு பட்டது.


காசி பாதயாத்திரை

காசி பாதயாத்திரை



கொன்னையூர் வந்து சேர்ந்தோம்.  இங்கே மழை இல்லை.
அருள்மிகு மாரியம்மன் கோயில் வழிபாடு.  நல்லதொரு தரிசனம்.
கோயிலில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திற் கெல்லாம் மழைமேகம் சூழ்ந்து இருட்டி விட்டது. மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி. பாதை சரியாகத் தெரியவில்லை.  இருட்டுவதற்கு முன்னதாகவே சென்று சேர்ந்துவிடுவோம் என்ற கணிப்பில் கையில் டார்ச் லைட்டை யாரும் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை.

கொண்ணம்பட்டி அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் திருமண மண்டபம் வந்து சேர்ந்தோம்.  மண்டபத்தில் இருந்த ஒருவர், மண்படத்தைத் திறப்பதற்காகச் சாவி வாங்கி வருவதற்காகச் சென்றுவிட்டார்.  நாங்கள் யாத்திரிகர் அனைவரும் மண்படம் வாசலில் நின்று கொண்டிருந்தோம்.

கனமழை பெய்ய ஆரம்பித்தது.   காற்றும் மழையும் மிகவும் அதிகமாக  இருந்தன.  அனேகமாக அனைத்து யாத்திரிகர்களும் நனைந்து விட்டோம்.  சுமார் 1மணி நேரத்திற்கும் கூடுதலாக மழை பெய்து ஓய்த பின்னரே, சாவியைக் கொண்டு வந்து மண்டபத்தைத் திறந்தனர்.  மழைத் தண்ணீர் ஜன்னல் கதவுகளின் வழியாக மண்டபத்தின் உள்ளே வந்து மண்டபம் முழுவதும் தண்ணீராக இருந்தது.  மின்சாரமும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமையல் முடிந்து சாப்பாடும் முடிந்தது. 
மண்படபத்தில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த தண்ணீரைத் துடைத்து அவரவர்க்கு கிடைத்த இடங்களில் படுத்துத் தூங்கினோம்.  மின்சாரம் இல்லாமல் இருளாகவும், கனமழை பெய்திருந்ததால் கூதலாகவும் இருந்தது.

காசி பாதயாத்திரை

https://goo.gl/maps/6i7VNxtmhgwauQAT8
இன்றைய பயணம் சுமார் 7 கி.மீ.
தொடரும் …..  …..

05.06.2014 காசி பாதயாத்திரை (11 ஆவது நாள் காலை)

05.06.2014 காசி பாதயாத்திரை (11 ஆவது நாள்)
வைகாசி 22  வியாழக் கிழமை.

காசி பாதயாத்திரை
வலையபட்டியில்  அருள்மிகு ஸ்ரீ துர்க்கை யம்மன் பங்காளிகள் படைப்பு வீட்டில் தங்கியிருந்தோம்.  நகரத்தார் பலரும் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.  காலை உணவும், மதிய உணவும் வழங்கிச் சிறப்புச் செய்தனர்.
 
காசி பாதயாத்திரை

பாதயாத்திரைக்கான ஏற்பாடுகள்  - இங்கு அன்னதான வண்டியில் இருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் இறக்கி அவற்றை வகைப்படுத்தி எந்தெந்த உணவுப் பொருள் தேவையாக இருக்கும் என்பதை யெல்லாம் கணக்குப் பார்த்து, வரவிருக்கும் நாட்களில்                 யாத்திரைக்கு வேண்டிய அனைத்து உணவுப் பொருட்களையும் சேகரித்து அவற்றை அன்னதான வண்டியில் பத்திரமாக அடைந்து வைத்தனர்.  யாத்திர்கள் பயன்படுத்தும் பொருட்களை அவரவர் பைகளில் வைத்து, அந்தப் பைகளை யெல்லாம் ஒரு மூடையாகக் கட்டி அன்னதான வண்டியில் அடைந்து வைத்தனர். இதனால் நேற்றும் இன்றும் குருசாமி அவர்களுக்கு ஓயாத வேலையாக இருந்தது. 
சமையல்காரரால் ஏற்படுத்திய சங்கடம் -  சமையல்காரர்கள் மொத்தம் மூன்று பேர்.  தலைமைச் சமையல்காரர், உதவிச் சமையல்காரர், மற்றும் பாத்திரங்களைக் கழுவ வைக்க என ஒருவர்.  இதில் தலைமைச் சமையல்காரருக்குச் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்து மருத்துமனையில் சேர்ந்து அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.  இந்தத் தகவலை அவர் குருசாமியிடம் சொல்லாமல் மறைத்துள்ளார்.   இன்று உதவிச் சமையல்காரர் இதைக் குருசாமியிடம் சொல்லிவிட்டார்.  இந்த யாத்திரை மிகவும் கடுமையான பயணத்தைக் கொண்டது.   வடநாட்டில் போய்க் கொண்டிருக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் போனால் வைத்தியம் பார்ப்பது சிரமம் என்பதைத் தலைமைச் சமையல்காரருக்குக் குருசாமி எடுத்துச் சொல்லி விளங்க வைத்தார்.  அவரது மகனுக்குப் போன் செய்து, அவன் வந்ததும் அவனிடமும் விளக்கிச் சொல்லி அவனது தந்தையாரை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு செய்தார்.   தலைமைச் சமையல்காரர் இதுவரை வேலைபார்த்த நாட்களைக் கணக்குப் பார்த்து அதற்கான சம்பளத்தைக் கொடுத்தார்.    மேலும் அவர் மூலமாகவே வேறொரு சமையல்காரரை யாத்திரைக்கு ஏற்பாடு செய்தார். இதிலேயே குருசாமிக்கு நேரமும் காலமும் போனது.  
(சமையல்காரரைப் படம் எடுக்க வாய்ப்பில்லாமல் போனது)

கடந்த ஆண்டு காசிபாதயாத்திரையின் போது கலந்து கொண்ட அடியார் ஒருவர் வந்திருந்து குருசாமிக்கு சற்று ஒத்தாசையாகச் செயல்பட்டார்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 4 ஜூன், 2020

04.06.2014 காசி பாதயாத்திரை (10 ஆவது நாள்)

04.06.2014 காசி பாதயாத்திரை (10 ஆவது நாள்)
வைகாசி 21 (04.06.2014) புதன் கிழமை.

மேலைச்சிவபுரி யிலிருந்து புறப்பட்டு புதுப்பட்டி வழியாகப் பொன்னமராவதி வந்து சேர்ந்து, வலைபட்டியில் உள்ள குருசாமி பச்சைக்காவடி அவர்களது வீட்டிற்குச் சென்று சேர்ந்தோம்.


https://goo.gl/maps/FVNX96a8PXgrFUVL7
இன்றைய பயணம் சுமார் 7 கி.மீ.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

புதன், 3 ஜூன், 2020

03.06.2014 காசி பாதயாத்திரை (9 ஆவது நாள்)

03.06.2014 காசி பாதயாத்திரை (9 ஆவது நாள்)
வைகாசி 20 (03.06.2014) செவ்வாய்க் கிழமை.





03.06.2014 அன்று அதிகாலை 2.40 மணிக்கு. புறப்பட்டோம்.    திருப்புத்தூர் கண்டவராயன்பட்டி வழியாக மகிபாலன்பட்டி சென்றடைந்தோம். 

வழியில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் திரு உருவம் கண்டு வணங்கிக் கொண்டோம்.


கண்டவராயன்பட்டியிலும் மகிபாலம்பட்டியிலும் நகரத்தார் எங்களை வரவேற்று உபசரித்தனர்.  


மகிபாலன்பட்டியிலிருந்து புறப்பட்டு, நெற்குப்பை, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி சென்று சேர்ந்தோம்.
ஞானம் கலியாணமண்டபத்தில் தங்கல்.


https://goo.gl/maps/b7NAVmj8wFssiseF7
இன்றைய பயணம் சுமார் 32 கி.மீ. 

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 2 ஜூன், 2020

02.06.2014 காசி பாதயாத்திரை (8 ஆவது நாள்)

02.06.2014 காசி பாதயாத்திரை (8 ஆவது நாள்)
வைகாசி 19 (02.06.2014) திங்கள் கிழமை.

காரைக்குடி யிலிருந்து காலை 3.30 மணிக்கு புறப்பட்டோம்.
உ. சிறுவயலைச் சேர்ந்த  திரு. செந்தில் நாதன் (எண் 8) மற்றும் திரு. மெய்யப்பன் (எண் 12) இருவரும் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்தனர்.  சிறுவயல் நகரத்தார் பலரும் குருசாமி பச்சைக்காவடி அவர்களை நேரில் சந்தித்து சிறுவயல் வழியாகக் குன்றக்குடிக்குச் செல்லுமாறு வேண்டுகோள் வைத்திருந்தனர்.  எனவே காரைக்குடியிலிருந்து கோவிலூர் வழியாகக் குன்றக்குடிக்குச் செல்லாமல், சிறுவயல் வழியாகக் குன்றக்குடி சென்றோம்.  சிறுவயலில் காலை 5.45 மணிக்கு, நகரத்தார்கள் யாத்திரிகர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.   அருள்மிகு பொன்னழகி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்து வைத்தனர்.  குருசாமி அவர்கள் நகரத்தார்களை ஆசிர்வதித்து பிரசாதம் வழங்கினார்.







உ. சிறுவயலில் இருந்து குன்றக்குடி செல்லும் வழியில் உள்ள சாளி ஸ்ரீ ஐநூற்றிவிநாயகர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டோம்.  அங்கிருந்து புறப்பட்ட சிறிது தொலைவிலேயே குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் கோபுரம் அருமையாகத் தெரிந்தது கண்டு வணங்கிக் கொண்டேன்.  

குன்றக்குடி வழியாகச் செல்லும் போது, குன்றக்குடி மடத்தின் வாயிலில் நின்று வணங்கிக் கொண்டேன். அப்போது இறையருளால் தவத்திரு அடிகளாரை வணங்கும் பேறு பெற்றேன்.  அடிகளார் அவர்கள் என்னை ஆசிர்வதித்து பிரசாதம் வழங்கினார்.  (இந்த நிகழ்ச்சி நடைபெற்றது ஓர் அற்புதம் என்றே கூற வேண்டும், இது பற்றி விரிவாகக் கீழே எழுதியுள்ளேன்).

10.00 மணிக்கு பிள்ளையார்பட்டி வந்தோம்.  வழியில், எதேச்சையாக எங்களை இராமசாமி தமிழ்க்கல்லூரின் மேனாள் முதல்வர் முனைவர் நா. வள்ளி அவர்கள் சந்தித்தார்.  குருசாமி அவர்களிடம் ஆசிபெற்றார்.  அம்மா வள்ளி அவர்கள் எனது முனைவர்பட்ட ஆய்வு நெறியாளர் ஆவார்.  அம்மா அவர்கள் என்னை ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருந்தது.

10.40 மணிக்கு வைரவன்பட்டி கோயில் அருகேயுள்ள நகரத்தார் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.  வைரவன்பட்டி நகரத்தார் விடுதியில் யாத்திரிகர்களை வரவேற்று மதியஉணவும் இரவுஉணவும் வழங்கினர்.  
வைரவன்பட்டி நகரத்தார் விடுதியில் தங்கல், ஓய்வு.

இன்றைய பயணம் சுமார் 18 கி.மீ.
https://goo.gl/maps/296yHQUZBuagxbMR8

8 ஆம் நாள் - எனது அனுபவம் -  முந்தைய நாட்களில் எனக்கு இருந்த உடல் அலுப்போ, மனச்சோர்வே இப்போது இல்லை.  இருந்தாலும் மற்றபிற யாத்திரிகர்களைப் போன்று வேகமாக என்னால் நடக்க இயலவில்லை.  குன்றக்குடிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போதே ஒரு குற்ற உணர்வு என் மனதில் தோன்றியது.  குன்றக்குடி தவத்திரு அடிகளார் அவர்களது ஆசிகளைப் பெறவில்லையே என்று எண்ணம் எனக்கு வருத்தத்தை உண்டாக்கியது.

திருப்பூவணம் கோயிலமைப்பை ஆய்வு செய்து, “திருப்பூவணக்காசி” என்ற பெயரில் நூலாக்கம் செய்திருந்தேன். 


குன்றக்குடி தவத்திரு அடிகளார் அவர்கள் 24.09.2007 அன்று இந்த நூலைக் வெயிட்டுச் சிறப்புச் செய்தார்கள்.  திருப்பூவணக்காசி என்ற பெயரில் நூல் எழுதி வெளியிடும்போது, காசிக்குப் பாதயாத்திரையாகச் சென்று வழிபட வேண்டுமென வேண்டிக் கொண்டேன்.  அந்த வேண்டுகோளின் பயனாகவே இந்தக் காசி பாதயாத்திரை சித்தித்தது.

குன்றக்குடியைக் கண்டு மனம்குன்றியது -
குன்றக்குடி குருமகா சந்நிதானம் அவர்களைச் சந்தித்து, பாதயாத்திரை செல்வதற்கு அவரது ஆசிகளைப் பெறமுடியாமல் போனதே என்று மனம் வருந்தினேன்.  சிறிது வேகமாக நடந்தால், குன்றக்குடி மடத்தில் இருக்கும் யாரிடமாவது செய்தியைச் சொல்லிச் சென்றிடலாம் என்று எண்ணினேன்.  வேகமாக நடக்கத் தொடங்கினேன்.  என்னதான் நான் வேகமாக நடந்தாலும், எனக்கு முன்னால் நடந்தவர்களைப் பிடிக்க முடியவில்லை.  குன்றக்குடி வந்துவிட்டோம்.  அடிவாரத்தில் கோயில் நுழைவாயில் நின்றுகொண்டு, அருள்மிகு சண்முகநாதனை நினைந்து வணங்கிக் கொண்டு நடந்தேன்.  குன்றக்குடி மடத்தின் வாயில் அருகே செல்லும் போது, மற்ற யாத்திரிகர்கள் எல்லோரும் வேகவேகமாக என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.  செய்தி சொல்லிச் செல்வோம் என்று நினைத்தால், மடத்தின் வாயிலிலும் உள்ளே மண்டபத்திலும் யாரையும் காணோம்.

குருமகா சந்நிதானம் முன் குறுகினேன் - சரி நமக்குக் கொடுத்துவைத்தது இவ்வளவுதான், என்று எண்ணிக் கொண்டே மடத்தின் வாயிலில் நின்றுகொண்டு ஒரு கும்பிடு போட்டேன்.  அப்போது, மடத்தின் வாயிலைக் கடந்து குருமகா சந்நிதானம் அவர்கள் மடத்தின் உள்ளே சென்றார். எனக்கோ மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  இப்போதுதானே குருமகா சந்நிதானத்தை நினைத்துக் கும்பிட்டோம். இதோ, அவரே மடத்தின் உள்ளே சென்று கொண்டிருக்கிறாரே என்று வியந்து, அடிகளாரைப் பின் தொடர்ந்தேன். அடிகளார் அவர்களின் பின்னே வந்த மடத்தின் சிப்பந்தி ஒருவர் என்னைத் தடுத்தார்.  சாமி பூஜையை முடித்துக் கொண்டு சிறிது நேரத்தில் வந்துவிடுவார். இங்கேயே இருங்கள் என்று சொன்னார்.  

அடிகளார் அவர்கள் நிச்சயம் நம்மைப் பார்த்திருப்பார்கள்.  ஒருவேளை காவிஉடையில் நாம் இருப்பதால் அடையாளம் தெரியாமல் போய்விட்டதோ, என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.  அடிகளார் அவர்கள் சிறிது நேரத்திலே பூஜையை முடித்துவிட்டு வந்துவிட்டார்கள்.  அடிகளாரின் அடிகளில் விழுந்து வணங்கி எழுந்தேன்.  அடிகளார் அவர்கள் ஆச்சரியத்துடன், இது என்ன இந்தக்கோலம் என்பது போன்று வியந்து என்னைப் பார்த்தார்கள்.

திருவருள் - காசிக்குப் பாதயாத்திரை செல்கிறேன் என்று சொன்னேன். அதைக் கேட்டதும் பெரிதும் மகிழ்ந்து விபூதி பிரசாதம் கொடுத்தார்கள்.  உங்களது குருசாமி யார்? மொத்தம் எத்தனைபேர் செல்கின்றீர்கள்? எத்தனை நாள் பயணம்? எங்கே தங்குவீர்கள்? என்ற விபரங்கள் எல்லாம் மிகவும் ஆம்வமாகக் கேட்டறிந்து கொண்டார்கள்.  அவரது உதவியாளரிடம் கும்பாபிஷேகப் பிரசாதம் 20 பைகள் கொண்டுவரச் சொல்லி என்னிடம் கொடுத்து, குருசாமி முதலான யாத்திரிகர் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்கள்.

மடத்தின் வாயிலில் நின்றுகொண்டு கைகளை உயர்த்திக் கும்பிட்ட அந்த ஒரு நொடிப் பொழுது நான் முந்தியிருந்தால், அடிகளார் அவர்களைப் பார்த்திருக்க மாட்டேன்.  சிறிது நான் பிந்தி வந்திருந்தாலும் அடிகளார் அவர்களை நான் பார்த்திருக்க மாட்டேன்.  மிகவும் கனகச்சிதமாகச் சொல்லி வைத்ததுபோல், நொடிப்பொழுது நேரத்தில் அடிகளார் அவர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பெரும்பேற்றை அருளிய அருள்மிகு சண்முகநாதனை நினைந்து வணங்கிக் கொண்டு பிள்ளையார்பட்டி நோக்கி நடக்கத் தொடங்கினேன். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் சற்று தொலைவில் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார்.  20 பிரசாதப் பைகளையும் தூக்கிக்கொண்டு வேகமாக நடப்பது எனக்குச் சற்று சிரமமாக இருந்தது.  

குருவருள் - சற்று தூரம் சென்று கொண்டிருக்கும் போது, என்னைக் கடந்து சென்ற வாகனம் (Car) ஒன்று நின்றது.  அதிலிருந்து அம்மா வள்ளி அவர்கள் இறங்கியதைக் கண்டதும் மிகவும் அதிசயித்துப் போனேன்.   அம்மாவிடம் குருசாமிஅவர்கள் நடந்து செல்வதைச் சுட்டிக்காட்டினேன். அம்மா அவர்களும் வண்டியில் ஏறிச் சென்று குருசாமி அவர்களிடம் நின்று ஆசிபெற்றார்கள்.  

இன்றை தினம் எனக்குச் சற்றும் எதிர்பாரதவிதமாகத் திருவளும் குருவருளும் கிடைத்தது. குன்றக்குடி மலையைப் பார்த்து நினைத்து வேண்டியது வேண்டியபடியே உடனடியாக நடைபெற்றது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.  

எப்படி இப்படி யெல்லாம் நடைபெற்றது என்று இன்றளவும் என்னால் நம்ப முடியவில்லை. 

குன்றக்குடி குருமகா சந்நிதானம் அவர்கள் வழங்கிய கும்பாபிஷேகப் பிரசாதப் பைகளைக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்து, யாத்திரையின் நிறைவு நாளில் யாத்திரிகர் அனைவருக்கும் கொடுத்து ஆசிர்வதித்தார்.

குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்,
திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம்.

திங்கள், 1 ஜூன், 2020

01.06.2014 காசி யாத்திரை (7ஆம் நாள்)

01.06.2014 காசி யாத்திரை (7ஆவது நாள்)

வைகாசி 18 (01.06.2014) ஞாயிற்றுக் கிழமை.

தேவகோட்டை தர்மபரிபாலனசபையிலிருந்து புறப்பட்டு அமராவதிபுதூர், தேவகோட்டைசாலை வழியாகக் காரைக்குடி காசிசத்திரம் வந்து சேர்ந்தோம்.  இன்றைய பயணம் சுமார் 16 கி.மீ. தொலைவுதான் என்பதால் எப்போதும் போல் அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படாமல் 5.00 மணியளவில் புறப்பட்டு 9.30 மணியளவில் காரைக்குடி காசிசத்திரத்திற்கு வந்து சேர்ந்தோம்.

வழியில் அமராவதிபுதூர் கடந்ததும் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.  தேவகோட்டைசாலை இருப்புப் பாதையைக் கடந்ததும் சாலைக்குத் தெற்கே உள்ள கூட்டறவு கட்டிடத்தில் காலை உணவு. 

7 ஆம் நாள் - எனது அனுபவம்

தொத்தமாடு - இன்று நடைப்பயணம் தொடங்கிய உடனேயே பலரும் வெயிலுக்கு முந்திச் சென்றுவிட வேண்டும் என்று வேகவேகமாக நடந்து சென்றனர். செருப்புக் கடித்துக்  கால் பெருவிரலில் புண் ஏற்பட்டு அதன் காரணமாக மெதுவாக நடந்து, என்னுடன் வந்த சிவாப்பா (எண் 21) அவர்களும் இன்று வேகமாக நடந்து சென்று விட்டார்.   ஆனால் தொத்தமாடாக மாறிப்போன நானோ மிகவும் மெதுவாகவே நடந்து வந்தேன்.  காலை நேரத்திலேயே வெயில் சுள்ளென்று முதுகில் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

யாத்திரை தொடங்கி 5நாட்கள் மட்டுமே நடந்துள்ளோம்.  6ஆவது நாள் நடக்கவில்லை.  இப்போதே இப்படி யிருக்கிறதே?  நான் எப்படி 103 நாட்கள் நடந்து காசிக்குப் போகப்போகிறோம் என்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தேன். 

அல்லது ஆற்றல் ஓம்புமின் - கிட்டாதாயின் வெட்டென மற …. ,  தகுதிக்கு மீறி ஆசைப்படாதே …. , என்பன போன்ற பல பழமொழிகள் நினைவிற்கு வந்து என்னை அமுக்கின.  இங்கேயே இப்படி யென்றால், இந்திதெரியாமல் மற்ற மாநிலங்களில் ஒத்தைமாடாக எப்படி நடந்து செல்வது?  பாதிவழியில் என்னால் நடக்கமுடியவில்லை என்றால் எனக்கும் சிரமம், குருசாமிக்கும் சிரமம், மற்றபிற யாத்திரிகர்களுக்கும் சிரமம் ஆகுமே என்று நினைத்து வருந்தினேன்.  உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் சோர்ந்து போனேன்.  தேநீர் குடித்தால் பரவாயில்லை என்பது போல் தோன்றியது.

காரைக்குடியில் குடும்பத்தினரும் நண்பர்களும் என்னைக் காண வருவார்கள்.  அவர்களைக் கொண்டு குருசாமியிடம் மெதுவாக எடுத்துச் சொல்லி,  யாத்திரையில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் காரைக்குடியுடன் பாதயாத்திரையை நிறுத்திக் கொள்வோம் என்று முடிவு செய்தேன்.

விதி மீறல் - பாதயாத்திரையின் போது, தேநீர் ரொட்டி மிட்டாய் உட்பட கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.  எது வேண்டுமானாலும் குருசாமியிடம் மட்டுமே கேட்கவேண்டும்.  அவர் வாங்கிக் கொடுப்பார்“ என்பது யாத்திரையில் முக்கியமான விதி.  எனக்கோ மிகவும் சோர்வாக இருந்தது.   தேநீர் குடித்தால் பரவாயில்லை என்பது போல் தோன்றியது.  அன்னதான வண்டி இன்னும் வரவில்லை.  அவர்கள் வந்தால் தான் தேநீரும் ரொட்டியும் கிடைக்கும். 
            திரும்பிப் பார்த்தேன். குருசாமி அவர்கள் வெகுதொலைவில் எனக்குப் பின்னால் வருவது தெரிந்தது.

நாம்தான் யாத்திரையை முடித்துக் கொள்ளப் போகிறோமே, அப்படியிருக்கக் கடையில் தேநீர் வாங்கிக் குடித்தால் என்ன? என்று மனத்தில் தோன்றியது.  அருகில் அமராவதிபுதூர் டீக்கடை கண்ணில் தெரிந்தது.  சற்று ஆறுதலாக இருந்தது.  கடைக்கு எதிரே ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தின் நிழலில் வந்து நின்று சற்று இளைப்பாறிச் சாலையைக் கடந்து டீக்கடைக்குச் செல்லத் தயாரானேன்.   முன்புபோல், ஒரே எட்டில் என்னால் இப்போது சாலையைக் கடக்க இயலாது என்பதை உணர்ந்திருந்தேன். சாலையைக் கடப்பதற்காக சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஏதும் வருகின்றனவா? எனப் பார்த்தேன். 

மூன்று சக்கர வண்டிக்காரர் - ஒரேயொருவர் மட்டும் மூன்றுசக்கர வண்டியைக் கையால் ஓட்டிக் கொண்டு எனக்குப் பின்னால் வந்து கொண்டிந்தார்.  அவரோ, கையால் மூன்றுசக்கர வண்டியை ஓட்டி வருகிறார், நாமோ நடக்க முடியாமல் நடக்கிறோம், எனவே அவர் நம்மைக் கடந்து சென்றதும் நாம் சாலையைக் கடந்து செல்வோம் என்று நினைத்து நின்றேன். அவரும் என்னைக் கடந்து செல்லாமல், என்னருகே வந்ததும் வண்டியை நிறுத்தி, நான் நின்ற மரநிழலில் அவரும் சற்று இளைப்பாறினார்.

ஒருசில நொடிகள் அவர் தாமதித்து இருந்தால், நான் சாலையைக் கடந்திருப்பேன்.  ஒருசில நொடிகள் நான் தாமதித்து இருந்தால், அவர் என்னைக் கடந்து சென்றிருப்பார்.

மிகவும் சோர்ந்து போயிருந்தார். குருட்டழுக்குப் பிடித்த ஆடை,  வண்டியைச் சுற்றிலும் பாட்டில்களும் பாத்திரங்களும் துணிகளும் தொங்கிக் கொண்டிருந்தன.  மூன்று சக்கர வண்டியின் முன்சக்கரம் சிறிது நெளிந்து கோட்டமாக இருந்தது.  பிரம்பு ஒன்றைச் சாய்த்துக் கட்டி வைத்திருந்தார்.  சுமார் 65 வயது இருக்கும். வடநாட்டவர் போல் தோன்றினார்.

பையா,  டீ சாப்பிடுகின்றீர்களா? எனக் கேட்டேன்.  முதலில் வேண்டாம் என்று தலையை ஆட்டினார்.  நான் எனக்காகச் சாப்பிடச் செல்கிறேன்.  அப்படியே ஒரு கப் உங்களுக்கும் வாங்கித் தருகிறேன்.  இதில் எனக்குச் சிரமம் ஒன்றும் இல்லை என்றேன்.  சிறிது நேர தயக்கத்திற்குப் பின், சரி என்று தலையை ஆட்டினார்.  தேநீர் வாங்கி வருவதற்காக வண்டியில் கட்டிவைத்திருந்த பாட்டில் ஒன்றைத் தேடி எடுத்தார்.  வண்டியைவிட்டுக் கீழே இறங்க முயற்சித்தார்.  

அதிர்ச்சி வைத்தியம் - செயற்கைக் கால் ஒன்றை எடுத்து மாட்டினார். அதைப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து போனோன், என் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு செயற்கைக் காலை எடுத்து மற்றொரு காலில் மாட்டினார்.  அவருக்கு இரண்டு கால்களுமே முழங்காலுக்கீழே இல்லை, இதைப் பார்த்ததும் பெரிதும் அதிர்ந்து போனேன்.

பையா, எங்கிருந்து வருகின்றீர்கள்? என்று கேட்டேன்.  இராமேசுவரத்தில் இருந்து வருவதாகக் கூறினார்.  அப்படியானால்,  உங்களது சொந்த ஊர் எது? என்று கேட்டேன்.   “மேதில்லி” என்றார், அப்படியானால் …. …? என்று சற்று இழுத்துக் கேட்டேன்.  தனக்கு வியாதி வந்து இரண்டு கால்களையும் இழந்து விட்டதாகவும், உயிர் பிழைத்தால் இராமேசுவரம் வந்து கும்பிடுகிறேன் என்று வேண்டிக் கொண்டதாகவும் கூறினார்.  அதன்படி வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக புதுதில்லியில் இருந்து இந்த வண்டியில் இராமேசுவரம் வந்து சாமிகும்பிட்டு விட்டு, இப்போது புதுதில்லிக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அவரது ஒவ்வொரு பதிலும் எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தது.

என்னடா இது, இரண்டு கால்களும் இல்லாத மனிதன் புதுதில்லியிலிருந்து இராமேசுவரம் வந்து சாமிகும்பிட்டுவிட்டுத் திரும்புகிறார்.  நமக்கோ எல்லாமும் நன்றாக உள்ளன, சாப்பாடு சவரட்டைனையும் பிரமாதமாக உள்ளது.  நடந்துசெல்வதற்கு நமக்கு என்ன கேடு வந்தது?  என்று நினைத்தேன்.

இப்போது, சற்று தொலைவில் அன்னதான வண்டியைச் சாலையோரம் நிறுத்தி, ஓட்டுநர் குருசாமியுடன் பேசிக் கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது. 

அவ்வளவுதான், வேகவேகமாகச் சாலையைக்கடந்து சென்று ஒரு கப் டீ வாங்கிக் கொண்டுவந்து அந்த அன்பரிடம் கொடுத்தேன்.  பின்னால் வருபவர் எங்களது குருசாமி, எனவே நான் விடை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு, வேகமாக நடக்கத் தொடங்கினேன்.

முன்பு இருந்த அலுப்பு சலிப்பு ஏதும் இப்போது என்னிடம் இல்லை.  தொத்தல் மாடாக இருந்த நான், திடீரென மஞ்சவிரட்டு மாடாக மாறி, வேகமாக துள்ளிக்குதித்து வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டேன்.  தேவகோட்டை சாலை தொடரிநிலையம் அருகே மற்ற எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.   வேகவேகமா நடந்து அவர்களுடன் சென்று சேர்ந்து விட்டேன்.  சற்று நேரத்தில் குருசாமி அவர்களும் வந்துவிட்டார்கள்.  காலை உணவை முடித்துக் கொண்டு, காரைக்குடி நோக்கி நடந்தோம். 

சிறிது நேரத்தில் காரைக்குடி நடராஜா திரையரங்கம் வந்து சேர்ந்து விட்டோம். குருசாமி அவர்கள் மட்டும் வரவேண்டும்.  அவர் வந்தவுடன் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து காசிச்சந்திரத்திற்குச் செல்ல வேண்டும்.  அதற்காகக் காத்திருந்தோம்.

குருசாமி வருகிறாரா? எனச் சாலையைப் பார்த்தேன்.  ஆனால் சாலையில் அந்த மூன்றுசக்கர வண்டிக்காரர் வருவதைப் பார்த்தேன்.  அவரும் நாங்கள் அனைவரும் நின்று கொண்டிருந்த அதே வேப்பரத்தின் நிழலில் வந்து சேர்ந்து இளைப்பாறினார்.  உங்களது வண்டியைப் பழுது நீங்கித் தருகிறேன், அதன்பின் பயணத்தைத் தொடருங்கள் எனக் கூறினேன்.  “வேண்டாம் வேண்டாம்” என்ற பலமாகத் தலையை ஆட்டினார்.  இந்தியில் பேசுவதைக் கேட்ட அருகில் இருந்த ஆட்டோக்காரர் வேகவேகமாக வந்து அவரிடம் அருமையாக இந்தியில் பேசினார்.  நாங்கள் செல்வதை எல்லாம் அவரிடம் அருமையாக இந்தியில் எடுத்துக் கூறினார்.  வண்டியை முழுவதும் சரிசெய்து, புதுவண்டிபோல் ஆக்கிக் கொடுக்க வேண்டும் என்றுகூறி பணத்தை ஆட்டோக்காரரிடம் கொடுத்தேன்.  உடனிருந்த யாத்திரிகர் சிலரும் பணம் கொடுத்தார்கள்.  அந்த வடநாட்டு யாத்திரிகர் இந்த உதவியை ஏற்க மறுத்தார்.

குருசாமி அவர்கள் இப்போது அருகில் வந்து விட்டார்.  நாங்கள் அவருடன் சேர்ந்து புறப்படத் தயாரானோம்.  இவரது மூன்று சக்கர வண்டியை முற்றிலும் சரிசெய்து, புதுவண்டிபோல் ஆக்கி இவரை நல்லபடியாக வழியனுப்பி வைக்கிறேன் என்று ஆட்டோக்காரர் எங்களுக்கு உத்தரவாதம் கொடுத்து பொறுப்பு ஏற்றுக் கொண்டு, எங்களை வழியனுப்பி வைத்தார்.

யாத்திரிகர் பலரும் இந்த வடநாட்டுக்காரர் பற்றியே பேசி இன்றைய பொழுதைக் கழித்தோம்.

இன்றைய பயணத் தூரம் 16 கி.மீ.
 

https://goo.gl/maps/VuzQJmxdfs9jFNYa9

பயணங்கள் தொடரும் …..

அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.